புறப்பொருள் எனப்படுவது,வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது.அகப்பொருள் வாழ்வியல் எனில் புறப்பொருள் உலகியல் ஆகும். புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரெண்டு வகைப்படும்.
1.வெட்சித்திணை: பகைநாட்டின் மீது போர் தொடங்கும் முன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் (பசுக்களுக்கு)தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச் செய்வது வெட்சித்திணை. அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வார்கள்.
2. கரந்தைத் திணை: வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் கரந்தைப் பூவை சூடிச் சென்று மீட்பது, கரந்தைத்திணை.
3.வஞ்சித்திணை: மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது, வஞ்சித்திணை.
4.காஞ்சித்திணை: தன் நாட்டைக் கைப்பற்ற  வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிட்டால் காஞ்சித்திணை.
5. நொச்சித்திணை: பகையரசனால் முற்றுகையிடப்பட்ட ம மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிட்டு, அம்மதிலை காப்பது நொச்சித்திணை.
6. உழிஞைத்திணை: உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச்சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.
7. தும்பைத்திணை: பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தம் வீரர்களுடன் போரிடுவது, தும்பைத்திணை. இவ்வீரர்கள் தும்பைப் பூவைச் சூடி போரிடுவர்.
8. வாகைத்திணை:  வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூவை சூடி மகிழ்வது, வாகைத்திணை.
9. பாடாண்திணை: பாடுதற்கு தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப் பாடுவது  பாடாண்திணை. (பாடு+ ஆண் + திணை= பாடாண்திணை).
10. பொதுவியல் திணை: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை.
11. கைக்கிளைத்திணை: கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இது ஆண்பால் கூற்று , பெண்பால் கூற்று என இருவகைப்படும்.
12. பெருந்திணை: பெருந்திணை என்பது பொருந்தா காமம். இதுவும் ஆண்பால் கூற்று , பெண்பால் கூற்று என இருவகைப்படும்.
 
Top